Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் தெரியாதவர்கள் அகழாய்விலா?: ஐகோர் கிடுக்கிப்பிடி! 

நவம்பர் 06, 2020 05:31

மதுரை: முதல்முறையாக கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துக்கள் கிடைத்துள்ள நிலையில், அதன் வயதை உடனடியாக கண்டறியும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ்மொழி சார்ந்தவை எனும்போது அதிகளவில் சமஸ்கிருத மொழி அறிந்தவர்கள் ஏன் பணி அமர்த்தப்படுகிறார்கள்?” என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அகழாய்வுகளில் முதல் முறையாகத் தமிழ் நெடில் எழுத்துக்கள் கிடைத்துள்ளது. கொடுமணல் அகழாய்வில் தமிழ் நெடில் எழுத்துக்களான அ, ஆ, இ, ஈ என கிடைத்துள்ளன. இந்த சூழலில் அகழாய்வு பணிகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனைக்கு உட்படுத்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்ப வேண்டும். இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் காமராஜ், " தமிழ் தொல்குடிகள் வாழ்ந்ததை ஆதாரங்களுடன் உறுதி செய்ய உதவும் வகையில், கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள், சிவகளை, கொந்தகை கிராமங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோல், “மதுரையிலுள்ள சமணர் படுகை உள்ளிட்ட அடையாளங்களைப் பாதுகாக்க” கோரி நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில், “ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வயதை கார்பன் டேட்டிங் முறையில் கணித்த போது, கி.மு.696 முதல் கி.மு.540 வரை, கி.மு.806 முதல் கி.மு. 906 ஆண்டு அதன் வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களில் 10 பொருட்கள் கார்பன் டேட்டிங் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாகத் தாமதமாகிறது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் ஏதேனும் சுவாரசிய தகவல்கள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தொல்லியல் துறை தரப்பில், “கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துக்கள் ஆகும். இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் நெடில் எழுத்துக்கள் கிடைக்கப்பெறாத நிலையில், முதல்முறையாக கொடுமணல் அகழாய்வில் ஆ போன்ற நெடில் எழுத்துக்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவும் அ, ஆ, இ, ஈ உள்ளிட்ட எழுத்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயதை அறியும் கார்பன் சோதனைக்கு உட்படுத்த, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், என்றும் இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தொடர்ந்து கல்வெட்டுகளைப் படிமம் எடுப்பது தொடர்பான நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டுகள் படிவம் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகளில் பல 15 அடிக்கு மேலாக இருப்பதால் அவற்றை படிமமெடுப்பதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன" என தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், “கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ்மொழி சார்ந்தவை எனும்போது அதிகளவில் சமஸ்கிருத மொழி அறிந்தவர்கள் ஏன் பணி அமர்த்தப்படுகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தொல்லியல் துறை தரப்பில், “கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் தன்னொளி கலைஞர்களாகவே இருப்பார்கள்” எனப் பதிலளித்தனர். தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட புராதன பகுதிகளாக 92 இடங்கள் உள்ள நிலையில் புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மதுரை யானைமலை பகுதி சமணசமய அடையாளமாகப் பார்க்கப்படும் நிலையில், அங்குப் புதிதாக, சிமெண்டாலான வழிபாட்டு அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் உடனடியாக அவற்றை அகற்றவும், பழங்கால சின்னங்களைப் பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்